Archives: ஜூன் 2017

தழைத்தோங்கும் தருணம்

எங்கள் பின் வாசல் பக்கம் உள்ள ரோஜாச் செடியை வெட்டிவிட வேண்டுமென கடந்த இளவேனிற் காலத்திலேயே தீர்மானித்தேன். நாங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இம்மூன்று வருடங்களிலும், அச்செடி பூக்கள் பூக்கவே இல்லை. பூக்களற்ற அசிங்கமான அதன் கிளைகள் எல்லா திசைகளிலும் இப்பொழுது படர்ந்துள்ளது.

என் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிட்டதால், என் தோட்டத்தைக் குறித்த திட்டங்கள் தாமதமாயிற்று. அதன் பின் சில வாரங்களில், அந்த ரோஜா செடி திடீரென பூத்து குலுங்கியது. அப்படியொரு காட்சியை நான் இதற்கு முன் கண்டதே இல்லை. நறுமணம் வீசும் நூற்றுக்கும் அதிகமான வெள்ளைப்பூக்கள் பின்வாசற் கதவில் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் அவை முற்றம் வரையிலும் கூட படர்ந்து அத்தரை பகுதியை அழகான இதழ்களால் மூடின.

எங்கள் ரோஜா செடியின் மறுமலர்ச்சி, இயேசு கூறிய அத்திமர உவமையை எனக்கு நினைவூட்டியது (லூ:13:6-9). அத்திமரம் காய்ப்பதற்கு மூன்றாண்டு கால அவகாசம் கொடுப்பது இஸ்ரவேல் தேசத்திலே வழக்கம். ஆனால், அவை மூன்று ஆண்டுகளில் காய்க்கவில்லை என்றால் அந்நிலத்தை வேறு விதத்தில் பிரயோஜனப்படுத்தும்படி அம்மரத்தை வெட்டிவிடுவார்கள். இயேசு கூறிய உவமையிலே, ஓர் தோட்டக்காரன் ஒரு மரத்திற்காக தன் எஜமானிடம் இன்னும் ஓர் ஆண்டுகால அவகாசம் கேட்பான். இந்த முழு உவமையின் பொருள் என்னவெனில், ‘தாங்கள் வாழ வேண்டிய விதத்திலே இஸ்ரவேலர் வாழவில்லை. ஆகையால் தேவனால் நீதியாய் அவர்களை நியாயந்தீர்க்க முடியும்.’ ஆனால் இரக்கமுள்ள தேவன், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புபெற்று பூத்து குலுங்கும்படி அவர்களுக்கு இரக்கம் பாராட்டி, கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார்.

நாம் அனைவரும் தழைத்தோங்க வேண்டுமென தேவன் விரும்புவதால், நம் அனைவருக்கும் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார். நாம் விசுவாசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் சரி, இரட்சிக்கப்படாத உற்றார் உறவினர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாலும் சரி, அவர் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்பது நம் அனைவருக்கும் நற்செய்தி அல்லவோ!

செயல்படும் விசுவாசம்

ஒரு நாள் என் தோழி காரை ஓட்டிக்கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றாள். அப்பொழுது சாலை ஓரத்திலே நடந்துகொண்டிருந்த ஒரு பெண்மணியை அவள் கண்டபோது, காரை நிறுத்தி அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என அவளுக்கு தோன்றியது. ஆகவே அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டாள். பிறகு, அவளுடைய நிலைமையை கேட்டறிந்தபோது என் தோழிக்கு மிகுந்த துக்கமாயிற்று. ஏனென்றால் அப்பெண் பஸ்ஸில் பயணம் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், பல மைல் தூரத்திலிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு இவ்வுஷ்ணமான வேளையிலும் நடந்து சென்றுகொண்டிருந்தாள். அதுமட்டுமின்றி காலையிலே வேலைக்கு வருவதற்கும் அதிகாலை 4 மணிக்கே வீட்டைவிட்டு பல மணிநேரம் நடந்தே வந்துள்ளாள்.

அப்பெண்ணை காரிலே அழைத்து சென்றதின் மூலம், கிறிஸ்தவர்களாகிய நாம், நம்முடைய விசுவாசத்தை கிரியைகளிலே காண்பிக்க வேண்டும் என்னும் யாக்கோபின் அறிவுரைகளை, என் தோழி இந்நவீன காலக்கட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளால். “விசுவாசம் கிரியை களில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்,” என யாக்கோபு கூறியுள்ளார் (2:17). சபையானது விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் காக்க வேண்டுமென்றார் (1:27). மேலும், வீண்வார்த்தைகளை சாராமல், அன்பின் கிரியைகளினாலே விசுவாசத்தை செயல் படுத்தி காட்டும்படி ஏவினார்.

நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டுள்ளோம்; கிரியைகளினாலல்ல. ஆனால், தேவைகளோடு இருப்பவர்களை நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது, நம்முடைய விசுவாசத்திலே நாம் ஜீவிக்கவும் செயல்படவும் செய்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்திலே நாம் இணைந்து பயணிக்கும்போது, நம் கண்களை எப்பொழுதும் திறந்துவைத்து, காரில் அழைத்துச் சென்ற என் தோழியைப்போல, தேவையோடு இருப்பவர்களைக் கண்டு உதவிடுவோமாக.

முற்றுப்பெறாத பணிகள்

மிகச் சிறந்த கலைஞராகிய மைக்கெலேஞ்ச (Michelangelo) இறந்தபொழது, அநேக நிறைவு பெறாத பணிகளை விட்டுச்சென்றார். ஆயினும், அவற்றில் நான்கு சிற்பங்கள் நிறைவு செய்யும் நோக்கத்தில் செதுக்கப்படவில்லை. ‘த பியர்டட் ஸ்லேவ்’ (The Bearded Slave – தாடி வைத்த அடிமை), ‘த அட்லஸ் ஸ்லேவ்’ (The Atlas Slave – பூமியை தோளில் சுமக்கும் அடிமை), ‘த அவேக்கனிங் ஸ்லேவ்’ (The Awakening Slave – விழித்தெழ முயலும் அடிமை), மற்றும் ‘த யங் ஸ்லேவ்’ (The Young Slave – இளம் அடிமை) ஆகிய சிற்பங்கள் நிறைவுபெறாதது போல காட்சியளித்தாலும், அவை அப்படிதான் இருக்கவேண்டுமென மைக்கெலேஞ்ச எண்ணினார். ஏனெனில் என்றென்றும் அடிமைப்பட்டிருப்பவனின் உணர்வுகளை அவர் வெளிக்காட்ட விரும்பினார்.

சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பது போன்ற உருவங்களை செதுக்குவதற்கு பதில், பளிங்கு கற்களில் வெளிவர முடியாதபடி பதிந்து மாட்டிக்கொண்டிருக்கும் உருவங்களை செதுக்கினார். அப்பாறைகளிளிருந்து உடல்கள் வெளிவர முயல்வது போலவும், ஆனால் முழுமையாக வர இயலாதது போலவும் அவை செதுக்கப்பட்டுள்ளது. தசைகளெல்லாம் வளைந்தும் நெளிந்தும் மடங்கியும் காணப்பட்டாலும் அவ்வுருவங்களால் தங்களைத் தாங்களே ஒருபோதும் விடுவித்துக் கொள்ள இயலாது.

அந்த ‘அடிமைச்’ சிற்பங்களை கண்டபோது, அவற்றின் மீது எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. ஏனெனில், பாவத்தோடு எனக்கிருக்கும் போராட்டத்திற்கும், அவர்களுடைய அவலநிலைக்கும் எவ்வித வித்தியாசமில்லை. அச்சிற்பங்களைப் போலவே என்னை நானே விடுவித்துக்கொள்ள முடியாதபடி மாட்டிக்கொண்டுள்ளேன். அதாவது, “என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவ பிரமாணத்திற்கு [நான்] சிறையா[கினேன்]” (ரோ. 7:23). நான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் என்னால் என்னை மாற்ற இயலவில்லை. ஆனாலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக. ஏனெனில் நீங்களும் நானும் ஒருபோதும் முற்றுப்பெறாத கிரியை போல இருக்க மாட்டோம். நாம் பரலோகம் செல்லும் வரை முழுமையடையாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரை வரவேற்போமாக. ஏனென்றால் அவர் நம்மை மாற்றுவார். நம்மில் நற்கிரியை தொடங்கின தேவன் தாமே அதை செய்து முடிப்பாரென அவரே வாக்குப்பண்ணியுள்ளார் (பிலி. 1:5).

ஐவிரல் ஜெபங்கள்!

நாம் தேவனோடு உரையாடுவதே ஜெபம். அது ஒரு சூத்திரம் அல்ல. ஆனாலும், சில சமயம் நமது ஜெபவேளைகளை புத்துணர்வூட்டும் பொருட்டு, ஒரு ‘முறைமையை’ கடைப் பிடிப்பது நன்று. அதாவது, தாவீதின் சங்கீதங்களைக் கொண்டும் ஜெபிக்கலாம் அல்லது வேறு வேதபகுதிகளைக் (பரமண்டல ஜெபம்) கொண்டும் ஜெபிக்கலாம். இல்லையெனில், ‘ஆராதனை, அறிக்கை, நன்றிசெலுத்துதல், விண்ணப்பித்தல்’ என்கிற வரிசை முறைமையிலும் கூட ஜெபிக்கலாம். சமீபத்தில், பிறருக்காக ஜெபிக்க உதவும் ‘ஐவிரல் ஜெபங்கள்’ என்கிற முறையைக் குறித்து அறிந்தேன்.

 ·        நீங்கள் கைகளைக் கூப்பும்பொழுது, உங்கள் பெருவிரல்தான் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, முதலாவது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக, அதாவது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக ஜெபியுங்கள் (பிலிப். 1:3–5).

·        இரண்டாவது, ஆள்காட்டி விரல். இது சுட்டிக்காட்ட பயன்படும். இப்பொழுது போதிப்பவர் களுக்காக ஜெபியுங்கள். அதாவது வேதாகம ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு போதிப்பவர்கள். (1 தெச. 5:25)

·        அடுத்த விரல் மற்ற விரல்களை விட பெரியது. அதிகாரத்தில் இருக்கிற தேசத் தலைவர்களுக்காகவும், உங்கள் வேலை ஸ்தலத்தில் இருக்கும் அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்க இவ்விரல் நினைவூட்டும் (1 தீமோ. 2:1-2)

·        நான்காம் விரல், பொதுவாக மற்ற விரல்களை விட பெலவீனமானது. ஆகவே, இப்பொழுது துயரத்தில் இருப்பவர்களுக்காகவும் துன்பப்படுகிறவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யவும். (யாக்:5:13-16)

·        கடைசியாக உங்கள் சுண்டுவிரல். தேவனுடைய மகத்துவத்தோடு நம்மை ஒப்பிட்டால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இவ்விரல் நமக்கு நினைவூட்டும். ஆகவே இப்பொழுது நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட ஜெபிக்கவும் (பிலி. 4:6,19)

 நீங்கள் எந்த முறைமையை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், ஆனால், பிதாவோடு நீங்கள் உரையாடுங்கள். உங்கள் இருதயத்தில் உள்ளதை அவர் கேட்க விரும்புகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை. 

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.